இருமொழி தேர்ச்சி கொண்ட பிள்ளைகளை வளர்ப்பதற்கான நுட்பங்கள்.. Techniques for Promoting Bilingual/Multilanguage Skilled Children....

Can translate to read in your own language

Sunday, April 7, 2013

இலங்கையில் சிறுவர் உரிமை ஏற்பாடுகள்

Childrenrightsசிறுவர் உரிமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் 1989ஆம் ஆண்டு நவம்பர் 20ம் திகதி சிறுவர் உரிமை பற்றிய சமவாயம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இலங்கை 1991இல்  இச்சமவாயத்தினை பின்னுறுதிப்படுத்தியதுடன் இச் சமவாயத்தின் ஏற்பாடுகள் இலங்கை யிலும் பயனுறச் செய்வதற்காக சிறுவர் பட்டயத்தை உருவாக்கியது. இச்சமவாயத்தின் அடிப்படையில் 18 வயதிற்கு குறைந்தவர்கள் சிறுவர்கள் என வரையரை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் வெவ்வேறான ட்டங்கள் வெவ்வேறான  வயதெல்லைகளை குறிப்பிடுகின்றன  உதாரணமாக : வேலைக்கமர்த்தல் தொடர்பில் 14 வயதிற்குட்பட்டவர்கள் சிறுவர்கள் எனவும், குற்றவியல் கோவையின் நோக்கத்திற்கு 18 வயது எனவும், சிறுவர் இளம்பிராயத்தவர் (தீங்குமிக்க வெளியீடுகள்) சட்டத்தில் 14 எனவும் வயதெல்லைகள் வேறுபடுகின்றன. இவற்றுடன் சிறுவர் உரிமைகள் தொடர்பாக பல சட்டங்களையும் இலங்கை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்;.



  சிறுவர்கள் தொடர்பான யாப்பு விதிகளும் சட்டங்களும்

•    1883 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தண்டனைச் சட்டக் கோவையின் (1995ம் ஆண்டின் 22ஆம் இலக்க மற்றும் 1998 ஆம் ஆண்டின் 29ஆம் இலக்கத் திருத்தங்கள்)


•    1841 ஆம் ஆண்டின் 04ஆம் இலக்க கட்டாக்காலி கட்டளைச்சட்டம்.


•    1865 ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கட்டிளமைப்பருவக் கட்டளைச் சட்டம்(1987 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க திருத்தம்)


•    1889 ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை. (1977 ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க, 1;980 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க, 1997 ஆம் ஆண்டின் 19ஆம் இலக்கத் திருத்தங்கள்)


•    1895 ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சான்றுக் கட்டளைச் சட்டம்.


•    1907 ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க பொது விவாக கட்டளைச் சட்டம், (1995 ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க மற்றும் 1997 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்கத் திருத்தங்கள்)


•    1927 ஆம் ஆண்டின் 04ஆம் இலக்க ஆபாசமான வெள்யீடுகள் கட்டளைச் சட்டம்.


•    1939 ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கட்டளைச்சட்டமும் அதன் திருத்தங்குளும்.


•    1939 ஆம் ஆண்டின் 31ஆம் இலக்க கல்விக் கட்டளைச் சட்டமும், அதன் கீழ் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளும்.


•    1939 ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க இளம் குற்றவாளிகள் (பயிற்சிப்பாடசாலைகள்) சம்பந்தமான கட்டளைச் சட்டமும், அதன் திருத்தங்களும்.


•    1941 ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க அநாதை விடுதிக் கட்டளைச் சட்டம்.


•    1944 ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க குற்றவாளிகளைச் சிறைப்படுத்தல் சம்பந்தமான சட்டமும், திருத்தங்களும்.


•    1948 ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க குடிவரவு, குடியகல்வு கட்டளைச் சட்டமும், திருத்தங்களும்.


•    1951 ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க பிறப்பு மற்றும் இறப்புகள் பதிவு செய்தல் கட்டளைச் சட்டம்.


•    1952 ஆம் ஆண்டின் 44ஆம்  இலக்க மலைநாட்டு விவாக கட்டளைச் சட்டம்.(1995 ஆம் ஆண்டின் 19ஆம் இலக்கத்  திருத்தம்)


•    1956 ஆம் ஆண்டின் 47ஆம் இலக்க பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களைச் சேவையில் ஈடுபடுத்துதல் சட்டமும், அதன் கீழ் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளும் (1964 ஆம் ஆண்டின் 43ஆம் இலக்கம், 1973 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்கம், 1984 ஆம் ஆண்டின் 32ஆம் இலக்கத் திருத்தங்கள்)


•    1978 ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க நீதிமன்ற அமைப்புச் சட்டம் (1979 ஆம் ஆண்டின் 37ஆம் இலக்க மற்றும் 1998 ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க திருத்தங்கள்)


•    1979ஆம் ஆண்டின் 04ஆம் இலக்க போதை வெறியில் செய்த குற்றங்கள் சம்பந்தமான கட்டளைச் சட்டம்.


•    1979 ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (1995 ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க, 1997 ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க, 1998 ஆம் ஆண்டின் 28ஆம் இலக்கத் திருத்தங்கள்).


•    197ஆம் ஆண்டின் 38ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தியமைக்கப்பட்ட சுவீகரித்தல் கட்டளைச் சட்டம்.


•    1998ஆம் ஆண்டின் 50ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டம்.


•    1999 ஆம் ஆண்டின் 37ஆம் இலக்க பராமரிப்பு (திருத்தம்) சட்டம்


மேற்குறிப்பிடப்பட்டுள்ளவாறு சிறுவர் உரிமைகளை பாதுகாப்பதற்கென  இலங்கை அரசு சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதனோடு சிறுவர் துஷ்பிரயேரகமானது  பொதுவாக இலங்கையில் குற்றமாகும். அதற்கேற்ப பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் உழைப்பு, கொடுமைப்படுத்தல் போன்றவை சிறுவர் துஸ்பிரயோகங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து சிறுவர் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் தண்டனைச் சட்டக் கோவையினில் கொடுக்கப்பட்டுள்ளதுடன் இதில் புதிய குற்றங்களாக சிறுவர்கள் பாலியல் சுரண்டல், பாரிய ஒழுங்கீனம், பாலியல் தொந்தரவு, பாரிய பாலியல் துஸ்பிரயோகம்  போன்ற புதிய குற்றங்களையும் உள்ளடக்கியுள்ளதுடன், ஏற்கனவே இருக்கின்ற குற்றங்களின் தண்டனையும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


இவற்றோடு 1999ம் ஆண்டு 32ம் இலக்க சான்று விசேட ஏற்பாடுகள் சட்டம் கொண்டுவரப்பட்டமையால் சிறுவரின் சாட்சியத்தை ஆரம்ப விசாரனையில் கட்புல பதிவுகளை  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
1998 ஆண்டு 50 ம் இலக்க சட்டம் மூலம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை உருவாக்கப்பட்டது. இதனது முக்கிய நோக்கம் சிறுவர் உரிமைகள் தொடர்பில் அரசிற்கு ஆலோசனை வழங்குதல், மற்றும் பாதிக்கப்பட்ட சிறுவர்களை பாதுகாப்பது போன்றனவாகும்.
1999 ஆம் ஆண்டு கீழ்தரமான சிறுவர் உழைப்பு பற்றிய சமவாயம் உருவாக்கப்பட்டதன் நோக்கமானது 18 வயதிட்குட்பட்ட சிறுவர்களை அடிமையாக வைத்திருப்பது, கட்டாய வேலையில் அமர்த்துதல், சிறுவர்களை கடத்தல், கடுமையான கட்டுப்பாடான வேலையில் அமர்த்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், ஆபாச நடவடிக்கைகளில் ஈடுபடுத்தல், மற்றும் கைத்தொழில் நிறுவனங்களில் ஆபத்தான இயந்திரங்களுடன் வேலை செய்ய அனுமதித்தல் போன்றவற்றிலிருந்து தடுப்பதாகும்.
சிறுவர் இளம்பிராயத்தவர் கட்டளைச் சட்டமானது குற்றம் புரிந்த சிறுவர்கள் எவ்வாறு நடாத்தப்பட வேண்டும் மற்றும் எத்தகைய தண்டணை வழங்க வேண்டும் என்பதை ஏற்பாடு செய்கிறது. இதற்கமைய இலங்கையில் குற்றம் புரிந்த சிறுவர்களை விசாரிப்பது பால்ய (சிறுவர்) நீதிமன்றம் ஆகும். இந்நீதிமன்றம் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ளது. ஏனைய பாகங்களில் நீதவான் நீதிமன்றமமே நியாயாதிக்கம் உடையதாகும். இவற்றோடு குற்றம் புரிந்த சிறுவர்கள் தொடர்பில் (18 வயதிற்குட்பட்டவர்களுக்கு) மரணதண்டணைத் தீர்ப்பு அல்லது ஆயுட்கால சிறைத்தண்டனைத் தீர்ப்பு வழங்க முடியாது. மேலும் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சிறைத்தண்டனையால் தண்டிக்கப்படலாகாது. மாறாக அவர்கள் தடுப்பு இல்லங்களில்; நன்நடத்தைக்காக ஏனைய சிறுவர்களுடன் தடுத்து வைக்கப்படலாம். ஆனால் விசித்திர நடத்தையுடையவர்களெனில் சிறையில் அடைக்கப்பட முடியும்.
இலங்கையில் சிறுவர் உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகளுக்கமைய சிறுவர்கள் பாடசாலைக்கு அனுப்பவேண்டிய வயது 5 தொடக்கம் 14 வயதுவரையாகும். அனுப்பத் தவறும் பொற்றோர் அல்லது பாதுகாவலர் தண்டனைக்கரிய குற்றம் புரிந்தவராவர்.



 2000 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பில் சிறுவர்  உரிமை  

இவ் அரசியலமைப்பில் அடிப்படை உரிமை எனும் அத்தியாயத்தில் பின்வரும் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவையாவன :


1.    பெயரைக் கொண்டிருப்பதற்கான உரிமை


2.    கொடுமைப்படுத்தல், துஸ்பிரயோகம் செய்யப்படுதல் மற்றும் இழிவுபடுத்தல்      போன்றவறிறிலிருந்த பாதுகாத்தல்.


3.    சிறுவருக்கு அநீதி இழைக்கப்படும் போது சட்டத்தரணியை  அமர்த்தல்.


4.    குடும்ப சூழலிலிருந்து பிரிக்கப்படும் போது தகுந்த மாற்றுக் கவனிப்பு வழங்கப்படல்.


5.    சிறுவரின் உயரிய நலனே முக்கியத்துவம் பெறல்.


6.    பாதுகாப்பான சூழலில் வாழ்வதற்கான உரிமை.


7.    அடிப்படை போசணைக்கும், உறைவிடத்திற்கும், அடிப்படை சுகாதார சேவைக்கும் உரித்துண்டு.


4.2 சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயம் மற்றும் சிறுவர் உரிமைகள்
பற்றிய இலங்கை சாசனம் - ஓர் ஒப்பீடு


சிறுவர் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனத்தை இலங்கையில் தேசிய மட்டத்தில் செயற்படுத்துவதற்கான சட்டங்களை ஆக்குவதற்கு அடிப்படையான கொள்கை திட்டமாக சிறுவர் உரிமைகள் பற்றிய இலங்கை சாசனத்தை 1991 ஜுலை 12ம் திகதி  இலங்கை அரசு பிரகடனப்படுத்தியது. சர்வதேச சாசனம், தேசிய சாசனம் ஆகிய இரண்டினையும் ஒப்பட்டு நோக்கும் போது :
சர்வதேச சாசனத்தில் 1,2,3,4,5,6,7,8,9,10,11,12,13,14,15,16,17 போன்ற உறுப்புரைகளில் காணப்படும் வாசகங்களும் தேசிய சாசனத்தில் காணப்படு;ம் அதற்கீடான வாசகங்களும் ஒரே விடயங்களினை குறித்து நிற்கின்றன.
அவ்வாறே சர்வதேச சாசனத்தில் 18,19,20,22,23,24 ஆம் வாசகங்களும் தேசிய சாசனத்தில் 09,10,21,23,24 ஆம் வாசகங்களும்  ஒரே விடயங்களினை குறிக்கின்றதுடன், சர்வதேச சாசனத்தில் 26, 27,28,29,30,31,32,33,34,35, ஆகிய வாசகங்கள் தேசிய சாசனத்திலும் அவ்வாறே உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதனுடன் சர்வதச சாசனத்தில் 37,39,40 ஆம் வாசகங்களும் தேசிய சாசனத்தில் 36,38,39 ஆம் வாசகங்களும் ஒத்தவையாக அமைந்துள்ளன
பெற்றோரின் வழிகாட்டல் சிறுவரின் திறமைகள் வளர்ச்சி தொடர்பாக சர்வதேச சாசனத்தில் 5 ம் வாசகத்தில் அமைந்துள்ள விடயங்கள் தேசிய சாசனத்திலும் 5 ம் வாசகத்தில் அமைந்துள்ளன. ஆனால் இவ்வாசகத்தில் சர்வதேச சாசனத்தில் இடம்பெறாத “சிறுவர் மனதின் ஆத்மீக வளர்ச்சிக்காக சிறுவருக்க சமயங்களை, வேதங்களை  கற்பிப்பதற்கும் ,சிறுவரை உரிய மத சூழலில் வளர்ப்பதற்கும் பெற்றோர்கள் கடப்படுள்ளவர்கள்” எனும் வாசகம்  தேசிய சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றுடன் சர்வதேச சாசனத்தின் 8 ஆம் வாசகம் ஒரு சிறுவரின் தன்த்தவதடதின் அடிப்படை அம்சமாக பிரஜாவுரிமை பற்றி குறிப்பிடும் வேளை தேசிய சாசனம் பிரஜாவுரிமை பற்றி குறிப்பிடாது தேசியத்தைப்பற்றிக் குறிப்பிடுகின்றது.
சர்வதேச சாசனத்தின 11 ம் வாசகத்தில் சிறுவர்கள் சட்டவிரேதமாக வெள்நாட்டுக்கு ஏற்றப்படுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை  எடுக்க வேண்டுமென முன்மொழியப்பட்டுள்ளமை தொடர்பாக தேசிய சாசனத்தில்  ஏதும் குறிப்பிடப்படவில்லை.இது தொடர்பாக தேசிய சாசனத்தில் பெற்றோர்களால் அல்லது வேறு நபர்களால் சிறுவர்கள் கடத்திச் செல்லப்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிடுகின்றது.
சர்வதேச சாசனத்தில் குறிப்பிடப்படாத ஒரு விடயம் தேசிய சாசனத்தின் 18 ம் வாசகத்தில் “சிறுவர்களுக்கு தேசியப்பற்றை ஏற்படுத்தி வளர்ச்சி செய்வது பெற்றூர்களினதும், கல்வி நிறுவனங்களினதும் கடமை” என குறிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர்களால்  சிறுவர்கள் தத்தெடுத்து வளர்ப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென தேசிய சாசனத்தின் 21 ம் வாசகம் குறிப்பிடுகின்றது.இவ்வாறானதொரு விடயம் சர்வதேச சாசனத்தில் இல்லை.அவ்வாரே தத்தெடுத்து வளர்ப்பதற்காக சிறுவர்களை பெற்றுக்கொள்ள  யாரேனுமொருவர் கர்ப்பிணிப் பெண்களை பராமரிப்பதில்லை என அரசு உறுதிப்படுத்த வேண்டுமென தேசிய சாசனம் கூறுகின்றது.
போசித்தல், பாதுகாப்பளித்தல்,அல்லது சிகிச்சையளிப்பதற்காக ஏதேனுமிடங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சிறுவர் தொடர்பாக காலத்துக்கு காலம் மீளாய்வு செய்வதன் அவசியம் பற்றிய சர்வதேச சாசனத்தின் 25 ம் வாசகத்தையொத்த ஒர வாசகம் தேசிய சாசனத்தில் உள்ளது.
சர்வதேச சாசனத்தின் 28 ம் வாசகம் “அடிப்படைக் கல்வியைக் கட்டாயப்படுத்தல்” பற்றிக் குறிப்பிடுகின்றது இதனை தேசிய சாசனத்தில் “வயது 06 – 16 வரையிலான சிறுவர்களுக்கு கல்வி கட்டாயமானதெனக்” குறிப்பிடுகின்றது.
பாடசாலை ஒழுக்க,நிர்வாகம் சிறுவரின் மனித கௌரவத்துக்கேற்ற முறையில் செயற்பட வேண்டுமென சாசனம் சிபாரிசு செய்தமையினை தேசிய சாசனம் “மனித” என்பதை நீக்கி கௌரவம் எனக் குறிப்பிடுகின்றமையுடன் ஒழுக்கத்தை கண்டிப்பாக நிருவகித்தல் பற்றி வலியுறுத்துகிறது.
தேசிய சாசனத்தில் ஆசிரியர்கள் மூலம் வாழ்க்கை தொடர்பான சமய, சமூக, மற்றும் கலாசார பெறுமானங்கள் பற்றி சிறுவர்களுக்கு சரியான வழிகாட்டல் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் வாழ்க்கை முறையாக சமயத்தின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்வதற்கும் ஆசிரியர் கடப்பாடு உள்ளவரெனவும் சிபாரிசு செய்கின்றது. இவ்வாறானதொரு ஏற்பாடு சர்வதேச சாசனத்தில் இல்லை.
சிறுவர் நலனில் ஏதேனுமொரு விதத்தில்  பங்கமேற்படுத்தக்கூடிய (சர்வதேச சாசனத்தில் 32,33,34,35 ம் வாசகங்களில் உள்ளடக்கப்படாத) 36ம் வாசகத்தில் குறிப்பிட்டுள்ளவாறு வேறு எல்லா வகையிலுமான முறைகேடான பிரயோசனம் பெறுவதிலிருந்து பாதகாத்தக் கொள்ளும் சிறுவரின் உரிமைக்கு ஏற்புடைய வாசகம் இலங்கை சாசனத்தில் இல்லை.
ஆயுதப் போராட்டங்களுக்கு தலையிடுவதற்கும் ஆயுதப்படைகளுக்குச் சேர்த்துகொள்வதற்குமான ஆகக் குறைந்த வயது 15 என சர்வதேச சாசனம் குறிப்பிடுகின்றது .ஆனால் தேசிய சாசனத்தில் இராணுவத்துக்குச் சேர்த்துக்கொள்ளப்படும் ஆகக் குறைந்த வயது 18 என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுவர் உரிமைகள் தொடர்பான  இலங்கை சாசனம் ஒரு சட்டம் அல்ல.அது எதிர்காலத்தில் சிறுவர் உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்டங்களை ஆக்குவதற்கு அடிப்படையாகக் கொள்ள வேண்டிய ஒரு கொள்கைத் திட்டமாகவே விளங்குகின்றது.


source - http://voiceofrights.webs.com/slchlid.htm

No comments:

Recent Post

உலக சிறுவர் தின வினாவிடைப் போட்டி 2021 පුරවන්න என்பதை சொடுக்கவும்

Madawala News