வணக்கம் அன்பிற்கினிய நண்பர்களே ! கடந்த பதிவு குழந்தை தொழிலாளி கவிதையை சுவாசித்து வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.இன்றைய பதிவில் இரண்டு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் ஏற்படும் குழந்தைகளுக்கான சண்டை சச்சரவுகளினை முடிந்தமட்டில் தடுப்பது எப்படி என்று அலசுவோம்.பொதுவாக இரண்டு குழந்தைகள் இருக்கும் வீட்டில் பெற்றோர்கள் அடிக்கடி நடக்கும் சண்டைகளை உறவினர்களிடம் சொல்லி சொல்லி கவலைப்படுவார்கள்.
இந்த பிரச்சினைகளை தீர்க்க தெரிந்த சில யோசனைகள்
உங்கள் உடன்பிறந்தவர்களை, குழந்தைகளுக்கு முன்னால் விட்டுக்கொடுத்து பேசாதீர்கள். உயர்வாக மட்டுமே பேசுங்கள்.
ஒரு குழந்தையைப் பற்றி இன்னொரு குழந்தையிடம் குறை சொல்லாதீர்கள்.
குறைகளோடு மற்றவர்களை ஏற்றுக் கொள்ளும் பழக்கத்தை நீங்களே முன்மாதிரியாக இருந்து ஏற்படுத்திக்கொடுங்கள்.
தின்பண்டங்களை பங்கு பிரிக்கும்போது யார் பங்கு பிரிக்கிறார்களோ, அவர்கள்தான் கடைசியில், தங்கள் பங்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என குழந்தைகளுக்கு சொல்லுங்கள். அப்போது, அவன் மட்டும் கூட எடுத்துக் கொண்டான் என்ற பிரச்சனை வராது.
‘இவன் செய்தது சரியா? நீயே சொல்’ என்று உங்களிடம் வந்தால், ‘கண்டிப்பா நான் கருத்து சொல்ல மாட்டேன். நான் சொல்லணும்னா நாளைக்குச் சொல்றேன்’ என்பதே உங்கள் பதிலாக இருக்க வேண்டும். ‘நீங்க ரெண்டு பேரும் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ். உங்களுக்குள்ள கருத்து வேறு பாடுகள் வர்றது சகஜம்தான். இதை நீங்களே சரி பண்ணிடுவீங்க. நான் இதுல தலையிட மாட்டேன்.’
இதையெல்லாம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஒப்பிட்டு பேசிப் பேசி, சகோதரர்கள விரோதிகளாக்குவது.குழந்தைகளை தொட்டதற்கெல்லாம் ஒப்பிடுவது ‘உன்னைவிட சின்னவன்தானே.. அவன் எப்படி படிக்கிறான் பாரு. நீயும்தான் இருக்கியே..’
இயல்பாகவே, யாருடன் ஒப்பிட்டு பேசுகிறோமோ, அவர்கள்மீது இனம்புரியாத வெறுப்பு தோன்றும். எனவே ஒப்பிட்டு பேசிப் பேசி சகோதரர்களை நிரந்தர சண்டைக் காரர்களாக மாற்றி விடாதீர்கள்.
குழந்தைகளுக்கு முன்னால் சண்டை போடாதீர்கள். ஏனெனில் குழந்தைகள் உங்களை பிரதிபலிக்கும் கண்ணாடிகள்.
அதே போல, ‘அவன் சின்னப்பையன். அவனோட போய் சண்டை போடுற. நீதான் பெரிய பையன். நீதான் விட்டுக்கொடுக்கணும்’ என்று பேசாதீர்கள். இந்த நியாயமெல்லாம் வளர்கிற வயசில் புரியாது. இந்த அறிவுரையை, இரண்டு பேரிடமும் சொல்லுங்கள். அப்போதுதான், பெற்றோர்கள் நம்மை சமமாக நடத்துகிறார்கள் என்பதை புரிந்து கொள்வார்கள். ஒற்றுமையாக இருப்பார்கள்.
கோபத்தில், ‘இவன் எனக்கு அண்ணனே இல்லை’ என்றால், அப்போதே இப்படியெல்லாம் பேசக்கூடாது என்று பாயாதீர்கள். பிறகு மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில் அதை சுட்டிக்காட்டி, கிண்டல் செய்யுங்கள். “கோபத்தில்கூட இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது” என்று உறுதி எடுத்துக்கொள்ள தூண்டுங்கள்.
இருவரில் யார் முதலில் சமாதானமாக போக முயற்சிக்கிறார்களோ, அவர்களே உங்கள் அபிமானத்திற்கு உரியவர்கள் என்பதைப் புரிய வையுங்கள்.
மற்றவர்களிடம் உங்கள் குழந்தைகளை அறிமுகப்படுத்தும்போது அவர்களின் நிறைகளை மட்டும் சொல்லி அறிமுகப்படுத்துங்கள்.
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களையும் வாக்குகளையும் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்..
No comments:
Post a Comment